×

அம்பத்தூரில் பிளஸ் 2 மாணவன் தற்கொலை காதல் வலையில் வீழ்த்திய டியூஷன் டீச்சர் போக்சோவில் கைது

சென்னை: அம்பத்தூரில் பிளஸ் 2 மாணவன் தற்கொலை தொடர்பாக, அவரை காதல் வலையில் வீழ்த்திய டியூஷன் டீச்சரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். அம்பத்தூரில் உள்ள உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வரும் ஷர்மிளா, பள்ளி முடிந்து மாலை நேரத்தில் தனது வீட்டில் மாணவர்களுக்கு டியூஷன் நடத்தி வருகிறார். இவரிடம் அப் பகுதியை சேர்ந்த பல மாணவர்கள் படித்து வந்தனர். கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவன் கிருஷ்ணகுமார், ஷர்மிளாவிடம் டியூஷன் படித்து வந்தார்.

இந்நிலையில் மாலை நேரத்தில் டியூசன் வரும் கிருஷ்ணகுமாரிடம் நெருங்கி பழகிய ஆசிரியை ஷர்மிளா அவரை காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். அன்பாக பேசி மாணவனை தன் ஆசை வலையில் சிக்க வைத்த ஆசிரியர் ஷர்மிளாவிடம் மாணவரும் நெருக்கம் காட்டியுள்ளார். இந்த உறவு தொடர்ந்துள்ளது. இருவரும் சேர்ந்து நிறைய புகைப்படங்களை செல்போனில் எடுத்துள்ளனர். வாட்ஸ் அப் மூலம் தங்களது புகைப்படங்களை பகிர்ந்து தங்களது பழக்கத்தை அதிகரித்துள்ளனர். இப்படி மாணவனுக்கும், ஆசிரியைக்கும் காதல் நீண்டு கொண்டே போனது.

அதேபோல் மாணவன் டியூஷன் முடித்து வீட்டுக்கு போனாலும், ஷர்மிளா தொடர்ந்து மாணவனை செல்போனில் தொடர்பு கொண்டு மணிக்கணக்கில் பேசி வந்துள்ளார். இந்நிலையில், மாணவன் கிருஷ்ணகுமார் பள்ளி படிப்பை முடித்துள்ளார். இதையடுத்து ஆசிரியைக்கும், மாணவனுக்குமான உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியது. இதற்கிடையே ஆசிரியை ஷர்மிளாவுக்கு நிச்சயதார்த்தம் முடிவானதால், மாணவனிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். ஆனால் மாணவன் தொடர்ந்து ஆசிரியரிடம் பேச வேண்டும், பழக வேண்டும் என்ற இருந்துள்ளார்.

இதையடுத்து மாணவன் ஆசிரியர் ஷர்மிளாவை நேரில் சந்திக்க முடிவு செய்து, ஆசிரியையின் திருமணம் குறித்து பேசியுள்ளார். அப்போது என்னை காதலித்து விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்வது நியாயமா என்று மாணவர், ஷர்மிளாவிடம் சண்டையிட்டுள்ளார். ஆனால் மாணவனிடம் இருந்து விலக வேண்டும் என்பதில் ஷர்மிளா உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தன் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் இது தொடர்பாக அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மாணவன் பயன்படுத்திய செல்போனில் ஆசிரியை ஷர்மிளாவும், மாணவனும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள், அந்தரங்கமாக பேசிய ஆடியோ ரிக்கார்டுகள் உள்ளிட்டவை இருந்தது. இதை மாணவனின் உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அம்பத்தூர் மகளிர் போலீசார் ஷர்மிளாவிடம் விசாரணை நடத்தினர். ஆசிரியை செல்போனையும் போலீசார் ஆய்வு செய்ததில், மாணவனிடம் கவர்ச்சியாக பேசி காதல் வலையில் அவரை வீழ்த்தியது தெரியவந்தது.

இதையடுத்து வயது குறைவான மாணவனை, தன் ஆசைக்காக தவறான கண்ணோட்டத்தில் பழகிய குற்றத்திற்காக ஆசிரியை ஷர்மிளா மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஆசிரியை ஷர்மிளாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவனும், ஆசிரியையும் எந்த மாதிரியான உறவில் இருந்தார்கள் என்பதை கண்டுபிடிக்க ஆசிரியர் ஷர்மிளாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனை முடிவில் தான் இருவருக்கு உடல் ரீதியாக உறவு உள்ளதா என்பது தெரியும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags : Pokso , Tuition teacher who lured Plus 2 student to suicide love trap in Ambattur arrested in Pocso
× RELATED சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் போக்சோவில் 17 வயது சிறுவன் கைது