புதுடெல்லி: தமிழ்நாடு உட்பட 6 இடங்களில் தொலைதொடர்பு சேவை வழங்க அதானி நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு உரிமம் வழங்கி உள்ளது. சுரங்கம், துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைத் தொடர்ந்து தொலைதொடர்பு துறையிலும் நுழைந்துள்ள அதானி குழுமம் சமீபத்தில் நடந்த 5ஜி ஏலத்தில் பங்கேற்றது. இதில் அதானியின் டேட்டா நெட்வொர்க்ஸ் நிறுவனம், 26 ஜிகா ஹொ்ட்ஸ் அதிர்வெண் கொண்ட 400 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ரூ.212 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஏலம் விடப்பட்ட மொத்த அலைக்கற்றையில் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே அதானி நிறுவனம் வாங்கி உள்ளது. இந்நிலையில், தற்போது அதானி நிறுவனம் இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையை துவங்குவதற்கான உரிமத்தை ஒன்றிய அரசின் தொலைதொடர்பு துறை வழங்கி உள்ளது. இதன்படி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய 6 இடங்களில் தொலைதொடர்பு சேவையை வழங்க அதானி நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது.