சேலம்: மேட்டூர் அணை நடப்பாண்டில் 2-வது முறையாக அதன் முழு கொள்ளவான 120 அடியை எட்டியுள்ளதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இன்று அதிகாலை 3.30 மணியளவில் மேட்டூர் ஆணை அதன் முழு கொள்ளளவான 12 அடியை மீண்டும் எட்டியது. ஜூலை 16-ம் தேதி மேட்டூர் அணையின் வரலாற்றில் 42-வது முறையாக முழுமையாக நிரம்பியது.
தற்போது 3 மாதத்திற்கு பிறகு நடப்பாண்டில் 2-வது முறையாக மீண்டும் முழு கொள்ளவை எட்டி கடல்போல காட்சியளிக்கிறது. இதனால் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் பாலம் மீண்டும் திறக்கப்பட்டு வினாடிக்கு 5,000 கனஅடி தண்ணீரும், நீர் மின் நிலையம் வழியாக வினாடிக்கு 23,000 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு போகுமாரும், கால்நடைகள், உடமைகளை பாதுகாப்பாக எடுத்து செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.