×

ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் பெண் உள்பட 3 பேர் அதிரடி கைது

கடலூர் : கடலூர் அருகே உள்ள குறவன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் சிவமணி (32). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணமாகி சத்யா என்ற மனைவியும், சுதீஷ் என்ற இரண்டு வயது ஆண் குழந்தையும் உள்ளனர். நேற்றுமுன்தினம் காலை கிழக்கு ராமாபுரத்தில் உள்ள ஒரு வாழை தோப்பில், சிவமணி கொடூரமான முறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும், கையில் வெட்டு காயங்களுடனும் பிணமாக கிடந்தார். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி (பொறுப்பு) தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிவமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், சிவமணியின் மனைவி சத்யா திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் அளித்தார். அதில், தனது கணவரை கிழக்கு ராமாபுரத்தை சேர்ந்த வனிதா, குறவன் பாளையத்தை சேர்ந்த வேல்முருகன், அம்பாள்புரத்தை சேர்ந்த சங்கர் ஆகியோர் ராமாபுரத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் நடந்த மண்டலாபிஷேக பூஜைக்காக அழைத்துச் சென்றதாகவும், அதன் பின் தனது கணவர் வீடு திரும்பவில்லை என்றும், இந்த மூன்று பேரும் சேர்ந்து தனது கணவரை கொலை செய்திருக்கலாம் என்றும் புகார் அளித்தார்.

அதன் பேரில் வனிதா, வேல்முருகன், சங்கர் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வனிதா, சிவமணியின் உறவினர் என்பதும், இதனால் அடிக்கடி சிவமணி வனிதாவின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்போது வனிதாவின் மகளிடம், சிவமணி அத்துமீறி நடந்ததால் அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கோயில் திருவிழாவுக்கு வந்த சிவமணியிடம் வனிதா தட்டி கேட்டுள்ளார். இதன்பிறகு 3 பேரும் சிவமணியை ராமாபுரத்தில் உள்ள வாழை தோட்டத்திற்கு அழைத்துச் சென்று கழுத்தறுத்து படுகொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ராமாபுரத்தில் பதுங்கி இருந்த வனிதாவை கைது செய்தனர். இநநிலையில் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட வேல்முருகன் மற்றும் சங்கர் ஆகியோர் சேலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கடலூர் டிஎஸ்பி கரிகால் பாரிசங்கர் தலைமையில், இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையிலான தனிப்படை போலீசார், சேலத்திற்கு சென்று அங்கே பதுங்கி இருந்த வேல்முருகன் மற்றும் சங்கரை கைது செய்தனர். இதில் வேல்முருகன் வனிதாவின் உடன் பிறந்த தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Cuddalore: Krishnamurthy's son Sivamani (32) hails from Kuravanpalayam near Cuddalore. He is married to Sathya, an auto driver
× RELATED திருவேங்கடம் அருகே நேற்றிரவு...