பூந்தமல்லி: தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ள நிலையில் மழைக்கால பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நீர்நிலைகளை ஆழப்படுத்துதல், கரைகளை பலப்படுத்துதல், கால்வாய்கள் தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பணிகளை விரைவு படுத்தவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். இதன் தொடர்ச்சியாக, மதுரவாயலை அடுத்த வானகரம் பகுதியில் சப்-கலெக்டர், பூந்தமல்லி தாசில்தார் செல்வம், வானகரம் ஊராட்சி தலைவர் ஜமுனா சீனிவாசன் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று ஆய்வு செய்தனர்.
வானகரம் ஊராட்சியில் மழைக் காலங்களில் அதிக அளவு பாதிப்பு ஏற்படும் பகுதிகளான ஓடமா நகர், ஜெய்ராம் நகர், வள்ளியம்மாள் நகர் உள்ளிட்ட பல இடங்களில் பார்வையிட்டனர். மேலும் இந்த பகுதிகளில் மழைநீர் கால்வாய்கள் தூர்வாருதல், புதிய கால்வாய் அமைத்தல், நீர்நிலைகளின் நிலை, மழைக் காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசனை செய்தனர்.