சென்னை: தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக கள் தடையை நீக்க கோரியும் பனையேறிகளுக்கு எதிராக நடக்கக்கூடிய மனித உரிமை மீறல்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பனை எங்கள் திணை என்ற முழக்கத்துடன் மூன்று சிறுவர்கள் உட்பட எட்டு பேர் கொண்ட குழுவினர் மிதிவண்டி பயணமாக 79 நாட்கள் 4000 கிலோ மீட்டர் பயணித்து தங்களின் பயணத்தை சென்னையில் நிறைவு செய்தனர். இதையடுத்து நிருபர்கள் சந்திப்பில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக பேசிய பெருமாள், ‘‘ ஒன்றிய அரசு கள் இறக்கும் தொழிலை அங்கீகரித்துள்ளது. எனவே பனை, தென்னை ,ஈச்ச மரங்களில் இருந்து பனையேறிகள் பதநீர் எடுக்கும் பழைய அரசாணையை அமல்படுத்த வேண்டும். பனையேறிகள் மீது போலீசார் பொய் வழக்குகள் பதிந்து கைது செய்து வருகின்றனர். இதனால் பனையேறிகள் பனைத் தொழிலே வேண்டாம் என்று வெளியேறி விடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.