சென்னை: விருகம்பாக்கத்தை சேர்ந்த டீ கடை உரிமையாளரை கத்தி முனையில் மிரட்டியும், தாக்கியும் மாமூல் வசூலித்த கவர்ச்சி நடிகை மாயாவின் மகனும், பிரபல ரவுடியுமான விக்கியை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து சொகுசு கார், கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை விருகம்பாக்கம் காந்தி நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சேர்மதுரை(38). இவர் விருகம்பாக்கம் காளியம்மன் தெருவில் டீ கடை நடத்தி வருகிறார். சேர்மதுரை நேற்று முன்தினம் கடையில் இருந்தார். அப்போது சாலிகிராமம் புஷ்பா காலனியை சேர்ந்த பழம்பெரும் கவர்ச்சி நடிகை மாயாவின் மகனும், ரவுடியுமான விக்கி(எ)விக்னேஷ்குமார்(38) என்பவர், சொகுசு காரில் வந்து இறங்கினார். பின்னர், பிரபல ரவுடியான தனக்கு நாள்தோறும் ரூ.1,500 மாமூலாக தர வேண்டும் என்று மிரட்டினார். அதற்கு கடையின் உரிமையாளர் சேர்மதுரை மாமூல் தர முடியாது, வேண்டும் என்றால் டீக்கு பணம் தர வேண்டாம். அதை மட்டும் ஓசியில் குடித்துவிட்டு போ என்று கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ரவுடி விக்கி மாமூல் தர மறுத்த சேர்மதுரையை கத்தி முனையில் தாக்கி கல்லாவில் இருந்த ரூ.1,500 பணத்தை பறித்து கொண்டு சென்றுவிட்டார். இதை சற்றும் எதிர்ப்பார்க்காத சேர்மதுரை சம்பவம் குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தியபோதுதான், நடிகை மாயாவின் மகனான விக்கியின் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் 8க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விக்கி(எ)விக்னேஷ்குமாரை கைது செய்தனர். அவனிடம் இருந்து சொகுசு கார் ஒன்றும், கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது. நடிகையின் மகன் மாமூல் வழக்கில் கைதான சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.