தூத்துக்குடி: தூத்துக்குடி திரேஸ்புரம் முத்தரையர் காலனி கடற்கரை பகுதியில் சுற்றித்திரிந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோனாதன் தோர்ன்(47) என்பவரை கியூ பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி மடக்கி பிடித்தனர். அவர் இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து கியூ பிரிவு போலீசார் வழக்கு பதிந்து ஜோனாதன் தோர்னை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த 3ம் தேதி தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் குபேரசுந்தர் முன்னிலையில் இவ்வழக்கின் குற்றப்பத்திரிகையை கியூ பிரிவு போலீசார் தாக்கல் செய்தனர். அன்றைய தினம் புழல் சிறையில் இருந்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஜோனாதன் தோர்னிடமும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
குற்றப்பத்திரிகை நகல் தமிழில் இருந்ததால், ஆங்கிலத்தில் நகல் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து குற்றப்பத்திரிகையின் ஆங்கில நகல் ஜோனாதன் தோர்னுக்கு நீதிமன்றத்தில் நேற்று வழங்கப்பட்டது.