மன்னார்குடி: திருவாருர் மாவட்டம் மன்னார்குடி கீழப்பாலம் அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் ஒம்மடியப்ப அய்யனார் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்குள் தீப்பாய்ந்தம்மன் பிரகாரம் உள்ளது. நேற்று மாலை பக்தர்கள் சாமி கும்பிட கோயிலுக்கு சென்றனர். அப்போது தீப்பாய்ந்தம்மன் பிரகாரம் அருகில் சந்தேகத்துக்கு இடமான வகையில் தகரப்பெட்டி ஒன்று இருந்தது. இதுகுறித்து மன்னார்குடி நகர காவல் நிலையம், வருவாய்த்துறைக்கு பக்தர்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் சென்று தகர பெட்டியை திறந்து பார்த்தனர்.
அதில், அரை அடி உயரமுள்ள கலை நயமிக்க ஆண்டாள் சிலை, சிறிய அளவிலான அன்னப்பூரணி அம்மன் சிலை, விநாயகர் சிலை என மூன்று உலோக சிலைகள் இருந்தது. இதையடுத்து 3 உலோக சிலைகளையும் பாதுகாப்பாக எடுத்து சென்று மன்னார்குடி தாசில்தார் ஜீவானந்தத்திடம் ஒப்படைத்தனர். இந்த சிலை எந்த கோயிலுக்கு சொந்தமானது, தகர பெட்டியில் சிலைகளை வைத்து சென்றது யார் என்று வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.