×

புறநகரில் தொடர் கைவரிசை 2 கொள்ளையர்கள் சிக்கினர்: 9 சவரன், வெள்ளி பறிமுதல்

வேளச்சேரி: வேளச்சேரி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 9 சவரன் நகை, வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர். வேளச்சேரி பகுதியில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் பூட்டிய கடை மற்றும் வீட்டின் கதவுகளை உடைத்து, நகை உள்பட பல்வேறு விலையுயர்ந்த பொருட்கள் கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், வேளச்சேரி இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் தனிப்படை போலீசார் மர்ம கும்பலை தேடி வந்தனர்.

மேலும், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து, அதனடிப்படையில்  விசாரித்தனர். அதில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது, மடிப்பாக்கத்தை சேர்ந்த பழைய குற்றவாளிகளான சூர்யா (24), வினோத்குமார் (20) என தெரியவந்தது. அவர்களை நேற்று முன்தினம் இரவு மடக்கி பிடித்தனர். விசாரணையில், அவர்கள் கடந்த 2016ம் ஆண்டு முதல் வேளச்சேரி, மடிப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதிகளில் பூட்டியிருக்கும் கடை, வீடுகளை உடைத்து நகை உள்ளிட்ட பல்வேறு விலையுயர்ந்த பொருட்களை திருடி வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து, வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்து,  அவர்களிடம் இருந்து 9 சவரன் , 301 கிராம் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Sawaran , 2 robbers caught in serial raid in suburbs: 9 Sawaran, silver seized
× RELATED புதுச்சேரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 54 சவரன் நகை கொள்ளை..!!