புதுடெல்லி: கிரிமினல் குற்ற வழக்கில் தண்டிக்கப்படும் அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்க வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து அதுசார்ந்த அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்னதாக மூன்று முறை விளம்பரப்படுத்த வேண்டும்’ என்பது உட்பட பல்வேறு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் இதனை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரித்து, ‘‘குற்றப்பின்னணி கொண்ட எம்பி, எம்.எல்.ஏக்கள் மீது 5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருக்கும் குற்ற வழக்குகளின் அனைத்து விவரங்களையும் 4 வாரத்திற்குள் உயர்நீதிமன்றங்கள் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு, வழக்கை 4 வாரம் ஒத்திவைத்தனர்.