சென்னை: சமாஜ்வாதிக் கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவின் மறைவு பெரும் அதிர்ச்சியும், துயரமும் அளிக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்தியாவில் சமூகநீதியின் தூணாக திகழ்ந்தவர். பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவர். வட இந்தியாவின் தவிர்க்க முடியாத தலைவர். சமூக நீதியின் தூணாக திகழ்ந்த அவரது மறைவு சமூக நீதிக்கு பெரும் இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் எனது அன்பு சகோதரர் அகிலேஷ் சிங் யாதவுக்கும், சமாஜ்வாதிக் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
உத்திரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் (82) காலமானார். அகிலேஷ் யாதவ், தனது தந்தை முலாயம் சிங் யாதவ் மரணத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தார். சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவு காரணமாக குருகிராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 2ம் தேதி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த முலாயம் சிங் யாதவ் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய இரங்கல் செய்தியை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.