சென்னை: சாதியும் வர்ணமும் மறந்துவிடக் கூடியவை அல்ல, அழித்தொழிக்கப்பட வேண்டியவை என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூற்றுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் ‘சாதி, வர்ணம் என்பவையொல்லம் இறந்தகால விவகாரங்கள் என்றும், அவற்றை மறந்துவிட்டு கடந்து செல்வோமென்றும் அண்மையில் கூறியிருக்கிறார்.
அவர் கூறுவது மிகப்பெரிய நகைப்புக்குரிய கேலிக்கூத்தாக உள்ளது. இதைவிட ஒரு நாடக அரசியல் வேறேதுமில்லை என்பதாக உள்ளது. இந்திய சமூகம் அல்லது இந்து சமூகம், சாதி, வர்ணம் ஆகிய இரண்டையும் தவிர்த்துவிட்டு இயங்கவே முடியாது. அந்த அளவுக்கு அவையிரண்டும் இந்தச் சமூகத்தின் அடிமுதல் நுனி வரையில் பரவி அதன் உயிரியக்கமாகவே விளங்குகிறது.
எனவே, தாங்கள் கூறுவதைப்போல சாதியும் வர்ணமும் மறந்துவிடக் கூடியவை அல்ல, வேரோடு கில்லி எறிந்து முற்றாக அழித்தொழிக்கப்பட வேண்டியவை. இதனை உணர்ந்து ஒப்புக்கொண்டு சாதியை- வர்ணத்தைச் சிதைப்பதற்கு, எச்ச சொச்சமும் இல்லாத அளவுக்குத் துடைத்தெறிய அதற்கென போராட முன் வாருங்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.