×

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் உறவினர்கள் தங்குவதற்கு புதிய கட்டிடம்

* 3500 சதுரடியில் ரூ.79.70 லட்சம் மதிப்பீட்டில் தயாராகிறது
* இரவு, பகலிலும் பயன்படுத்தி கொள்ளலாம்


திருச்சி : திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருந்துவமனை கட்ட அப்போதைய திமுக ஆட்சியின் போது முதல்வராக இருந்த கருணாநிதி பணிகளை துவக்கி வைத்தார். தற்போது அரசு மருத்துவமனையில் திருச்சி மட்டுமில்லாது சுற்று பகுதி மற்றும் அருகே உள்ள மாவட்டங்களில் இருந்து சிகிச்சைக்காக தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் பொது மருத்துவம், இருதயவியல், குழந்தைகள் நலப்பிரிவு, மூளை நரம்பியல், சிறுநீரகத்துறை, மூட்டு மற்றும் எலும்பு சிகிச்சை பிரிவு, காது, மூக்கு, தொண்டை பிரிவு, புற்று நோய் சிகிச்சை பிரிவு, மனநலப்பிரிவு, ஒட்டுறுப்பு பிரிவு, குடல் நோய் சிகிச்சை பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, அதிதீவிர சிகிச்சை பிரிவு, விபத்து அறுவை சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் நோயாளிகளின் வசதிக்காக சி.டி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், அல்ட்ரா ஸ்கேன், வயிறு சம்பந்தப்பட்ட ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட அதிநவீன ஸ்கேன் வசதிகள் உள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் தனியார் மருத்துவமனைக்கு இணையாக இருதயவியல், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை, புற்றுநோய் கட்டி அறுவை சிகிச்சை சிகிச்சை, உடல் உறுப்பு தானம் அறுவை சிகிச்சை உள்ளி்ட்டவைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனால் திருச்சி அரசு மருத்துவமனையில் தினமும் புறநோயாளிகளாக 4,500 பேர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் உள்நோயாளிகளாக 1,200 பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதில் தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்கு வந்து செல்வதால் நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் தங்குவதற்கு இடமில்லாததால் தவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது, நோயாளிகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இரவு மற்றும் பகலில் தங்குவதற்கு இடவசதி ஏற்படுத்த தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அமைச்சர் கே.என்.நேரு, அரசு மருத்துவமனை டீன் நேருவிடம் இடவசதி குறித்து கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் இடவசதி குறித்து டீன் நேரு கள ஆய்வு செய்து இதுகுறித்து அறிக்கை சமர்ப்பித்தார். இதையடுத்து வார்டு எண் 26க்குட்பட்ட புத்தூர் ஈவெரா சாலை அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்காக தங்கும் இடம் கட்டும் பணிக்காக ரூ.79.70 லட்சத்திற்காக திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.

இந்த திட்ட மதிப்பீட்டு தொகை குறித்து திருச்சி மாநகராட்சி சார்பில் நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு உரிய நிதி பெறுவதற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து திருச்சி மாநகராட்சியில் கடந்த 29ம் தேதி நடந்த சாதாரண கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான உரிய நிதி அனுமதி பெறுவதற்கான கருத்துரு சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து டீன் நேரு கூறுகையில், தாய்,சேய் மகப்பேறு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்காக அதன் அருகில் ஓய்வறை கட்டப்பட்டுள்ளது. அதுபோல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதில் நோயாளிகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஓய்வுக்காக பழைய கட்டிடம் அருகே தீவிர சிகிச்சை வார்டு இருந்த இடம் அருகே சுமார் 3,500 சதுர அடியில் புதிய ஓய்வறை கட்டப்பட உள்ளது என்றார்.

Tags : Trichy Government Hospital Campus , Trichy, Government Hospital, New Building
× RELATED சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே இன்று முதல் மின்சார ரயில் இயக்கம்