வாஷிங்டன் : பயங்கரவாதம், அமைதியின்மை காரணமாக ஜம்மு-காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்க அரசு தங்கள் நாட்டு பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சுற்றுலா, தொழில் உள்பட பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு அமெரிக்கா உள்துறை அமைச்சகம் ஆண்டுதோறும் அறிவுரை வழங்கியுள்ளது. இந்த பட்டியலில் 2-ம் கட்ட நிலையில் பட்டியலிடப்பட்டுள்ள இந்தியாவிற்கு செல்லும் அமெரிக்கர்கள் அதிக கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதம், அமைதியின்மை காரணமாக ஜம்மு-காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என்றும் ஆயுத மோதல் இருப்பதால் இந்தியா-பாக்கிஸ்தான் எல்லையின் 10கி.மீ. அருகே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை குற்றங்கள் இந்தியாவில் அதிகரித்து வருவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. பாக்கிஸ்தான் செல்லும் அமெரிக்கர்கள் பயங்கரவாதம் மற்றும் மத வன்முறையை கருத்தில் கொண்டு தங்களது பயணத்தை மறுபரிசீலனை செய்யலாம் என்றும் அமெரிக்கா அரசு தெரிவித்துள்ளது.