மதுராந்தகம்: புதூர் ஊராட்சியில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் பூதூர், ஈசூர் ஆகிய 2 பெரிய கிராமங்கள் உள்ளன. இங்கு, சுமார் 10 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், பசுமை புரட்சி ஏற்படுத்தும் விதமாக 2 கிராமங்களிலும் சுமார் 2000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஏ.சி.சுரேஷ் தலைமை தாங்கினார். துணை தலைவர் சாமுண்டீஸ்வரி முன்னிலை வகித்தார். முன்னதாக, ஊராட்சி செயலர் சத்யபிரியன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகலைசெல்வன் கலந்து கொண்டார்.
அப்போது, பூதூர் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், ஈசூர் கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோயில் வளாகம் மற்றும் அந்த கிராமத்தின் சில பகுதிகளில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவிலான அரசு புறம்போக்கு நிலத்தில் புங்கன், புளியமரம், தேக்கு, செம்மரம், பூவரசு, நாவல் உள்ளிட்ட 10 வகையான 2000 மரக்கன்றுகள் ஊராட்சி முழுவதும் நடப்பட்டுள்ளது. இந்த மரக்கன்றுகளை பராமரிக்கும் பணிகளில், தேசிய ஊரக வேலை பணியாளர்கள் சுமார் 40 பேர் தினந்தோறும் ஈடுபடுவார்கள் என ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.