மும்பை: பாலிவுட் மூத்த நடிகர் அருண் பாலி உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் அருண் பாலி (79), மும்பை புறநகர் பகுதியில் வசித்து வந்தார். அவர் ஏற்கனவே நரம்பு மற்றும் தசை பிடிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், மயஸ்தீனியா கிராவிஸ் என்ற ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அவரது மகன் தெரிவித்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்தபோது அவர் காலமானார். அருண் பாலியின் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள அருண் பாலி, கடைசியாக ஆமிர்கானின் ‘லால் சிங் சட்டா’ படத்தில் நடித்தார். மேலும் ‘3 இடியட்ஸ்’, ‘ஜப் வீ மெட்’, ‘பீகே’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 1989ல் ‘தூஸ்ரா கேவல்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் திரை உலகில் அறிமுகமான அருண் பாலி, ‘ஸ்வாபிமான்’ போன்ற தொடர்களில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.