மதுரை: கடவுளை வழிபடுவது அவரவர் நம்பிக்கையின்படியான உரிமை என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே மேல நேசநேரியில் உள்ள வாலகுருநாதசுவாமி திருக்கோயில், இருதரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னையால் 12 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இக்கோயிலை மீண்டும் திறப்பது தொடர்பான தகுதியான நபரின் (அதிகாரி) அறிவிப்பை ரத்து செய்யக் கோரி சீனி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ்பாபு பிறப்பித்த உத்தரவில், ‘‘2011ல் கோயிலை நிர்வகிக்க தகுதியான நபர் (அதிகாரி) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், அவர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோயிலை அறநிலையத்துறை ஏற்கவுமில்லை. தற்போது திடீரென அறிவிப்பு வெளியிட்டுள்ளது ஏற்புடையதல்ல. எனவே, கோயிலை திறப்பது தொடர்பான அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. கடவுளை வழிபடுவது ஒவ்வொரு தனிநபருக்கும் அவரவர் தனிப்பட்ட நம்பிக்கையின்படி உள்ள உரிமை. எனவே, கோயில் பிரச்னை தொடர்பாக அறநிலையத்துறை இணை ஆணையர் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தி 6 மாதத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.