சென்னை: கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு அதிகரித்து இருப்பதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர். சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் நேற்றைய நிலவரப்படி 609 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மழையின் காரணமாக வரத்துக் கால்வாய்கள் மூலமாக 95 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது 2655 மில்லியன் கன அடிநீர் உள்ளது. நீர்வரத்து 196 கன அடி. சென்னை மக்களுக்காக 196 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் 140 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 26 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் இப்போது 2850 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து வரும் நீர், மழைநீர் என 203 கன அடி நீர் வருகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 145 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல் கண்ணன் கோட்டையில் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது முழு கொள்ளளவை எட்டி 500 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக ஏரிகளில் உள்ள நீர் இருப்பு அதிகரித்திருப்பதாக நீர்வளத்துறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.