புதுடெல்லி: மதம் மாறிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, எஸ்சி அந்தஸ்து வழங்குவது பற்றி ஆராய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட பிரிவுகளை சேர்ந்த மக்கள் இந்துவில் இருந்து இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களுக்கு மாறினால், அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் பறிக்கப்படுகிறது. மேலும், தாழ்த்தப்பட்டோர் என்ற அந்தஸ்தையும் அவர்கள் இழக்கின்றனர். இந்நிலையில், மதம் மாறியபோதிலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டின் பலன்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மதம் மாறிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மீண்டும் தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி) என்ற அங்கீகாரத்தை வழங்கி, இடஒதுக்கீடு பலன்களை அளிக்கலாமா என்பது பற்றி ஆராய, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. இக்குழுவில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரவீந்தர் குமார் ஜெயின், பல்கலைக்கழக மானியக்குழு உறுப்பினர் பேராசிரியை சுஷ்மா யாதவ் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.