புதுடெல்லி: ‘உலகில் நான்காம் தொழிற்புரட்சியை வழிநடத்தும் ஆற்றல் இந்தியாவிடம் உள்ளது,’0 என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். குஜராத் மாநிலம், கேவடியாவில் ‘தொழில்துறை 4.0’ மாநாடு நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடியின் உரையை ஒன்றிய கனரக தொழில்துறை இணை செயலாளர் வாசித்தார். அதில் பிரதமர் மோடி கூறி இருப்பதாவது: இதற்கு முன் ஏற்பட்ட தொழிற்புரட்சிகளை இந்தியாவால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன. ஆனால், உலகின் 4வது தொழிற்புரட்சியை வழிநடத்தும் ஆற்றல் இந்தியாவுக்கு இருக்கிறது.
ஏனெனில், போதுமான மனித வளம், தேவைகள், தீர்க்கமான அரசு என அனைத்தும் இம்முறை ஒன்றாக இணைந்துள்ளன. உற்பத்தியில் உலகின் மிக முக்கிய நாடாக இந்தியாவை நிலைநிறுத்துவதில் பொருளாதாரத்துக்கும் வணிகத்திற்கும் முக்கிய பங்கு இருக்கிறது. இதை உணர்ந்து ஒன்றிய அரசு பல சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தொழில்நுட்பங்கள் மூலம் நடைபெறும் உற்பத்திக்கான உலக மையமாக இந்தியாவை மாற்றத் தேவையான சீர்திருத்தங்கள், ஊக்குவிப்புகளை அரசு செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.