லண்டன்: உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக நிலவும் எரிவாயு பற்றாக்குறை நெருக்கடியான நிலையை எட்டும்பொழுது, இங்கிலாந்தின் ஒருசில பகுதிகளில் 3 மணி நேரம் வரை மின்சார தடை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இங்கிலாந்து தேசிய மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இங்கிலாந்து மக்கள் அதிகமாக மின்சாரம் உபயோகிக்க கூடிய உபரணங்களான வாஷிங் மெஷின், டிஷ்வாஷர் மற்றும் டிரையர் போன்ற உபகரணங்களை அனைவரும் பயன்படுத்த கூடிய பகல் நேரங்களில் பயன்படுத்தாமல் இரவு நேரத்தில் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் மின்சார கட்டணங்களை சமாளிப்பதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் இங்கிலாந்து அரசாங்கம் ரூ. 40ஆயிரம் வரை மானியம் வழங்கி வருகிறது. இங்கிலாந்து கொரோனா காலத்துக்கு முன்னதாக இருந்த பொருளாதார சூழலை மீண்டும் எட்டிப்பிடிப்பதற்கு 2024-ம் ஆண்டு வரை ஆகலாம் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இந்த நிலையில் ஆன்லைன் நிறுவனமான அமேசான் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவு நெருக்கடியை சமாளிப்பதற்கு தனது ஊழியர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றது.