×

விஜய தசமி விழா: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அம்பு போடும் நிகழ்ச்சி கோலாகலம்

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரங்க நாச்சியார் நவராத்திரி விழா கடந்த மாதம் 26ம் தேதி துவங்கி கடந்த 4ம் தேதி வரை 9 நாட்கள் நடந்தது. இந்நிலையில் விஜயதசமி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி  உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளியவாறு சிங்க பெருமாள் கோயில் ஆஸ்தான மண்டபத்துக்கு காலை 10.30 மணிக்கு வந்து சேர்ந்தார்.

அங்கு ஆஸ்தானமிருந்தபடி மாலை வரை பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி சிங்கப்பெருமாள் கோயிலில் விஜயதசமி மண்டபத்துக்கு எதிரே உள்ள நாலுகால் மண்டபத்தில் இருந்தவாறு வன்னி மரத்தில் அம்பு எய்தும் நிகழ்ச்சியை கண்டருளினார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதைதொடர்ந்து நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி சாத்தார வீதி வழியாக வலம் வந்து கோயில் வளாகத்தில் உள்ள சந்தனு மண்டபத்துக்கு இரவு 8.30 மணிக்கு வந்தார். அதன்பின்னர் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அமுது பாறையில் இரவு 9.30 மணிக்கு திருமஞ்சனம் கண்டருளினார்.


Tags : Vijaya Dasami Festival ,Srirangam Ranganatha ,Arrow Shooting Ceremony , Vijaya Dasami Festival: Srirangam Ranganatha's Arrow Shooting Ceremony
× RELATED ஸ்ரீரங்கம் சென்றடைந்தார் பிரதமர் மோடி!!