நாமக்கல்: அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இணை பொதுச்செயலாளர் பதவி வழங்க எடப்பாடி பழனிசாமி முன்வந்ததாகவும், அதனை அவர் ஏற்க மறுத்துவிட்டதாகவும் முன்னாள் அமைச்சர் தங்கமணி பரபரப்பான தகவலை வெளியிட்டிருக்கிறார். பேச்சுவார்த்தையின் போது நத்தம் விஸ்வநாதனை பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் அடிக்க பாய்ந்ததாக அவர் கூறியுள்ளார். நாமக்கல்லில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் தங்கமணி பேசினார். அப்போது பேசிய அவர், கட்சி நிலையை தெளிவுபடுத்துகிறேன். அதிமுக தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். தற்போதைய நிலைய பார்த்து அதிமுக இருக்குமா?.. இரட்டை இலை இருக்குமா? என தொண்டர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
வேண்டியவர்களுக்கு சீட் வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் பிரச்சனை செய்தார். முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை வேண்டா வெறுப்பாகவே ஏற்றார். எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதிலும் பிரச்சினை செய்தார். ஓ.பி.எஸ்.க்கு இணை பொதுச்செயலர் பதவி தருவதாக எடப்பாடி கூறினார். ஓ.பி.எஸ். மகனுக்கு அமைச்சர் பதவி என்பதையும் பழனிசாமி ஏற்றார் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய தங்கமணி, கட்சி ஒற்றுமையாக இருக்கக்கூடாது என வைத்திலிங்கம் செயல்பட்டார். நத்தம் விஸ்வநாதனை வைத்திலிங்கம் அடிக்க பாய்ந்தார். பேச்சுவார்த்தை நடந்தபோதே நீதிமன்றத்தில் தடை பெற்றனர் என கூறினார்.