நெல்லை : நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு கதர் விற்பனை இலக்காக ரூ.46.25 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார்.காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாளை கதர் அங்காடியில் தீபாவளி கதர் விற்பனை தொடக்க விழா மற்றும் 154வது காந்தி ஜெயந்தி விழா நடந்தது. கலெக்டர் விஷ்ணு, காந்தி படத்திற்கு மாலையணிவித்து குத்துவிளக்கேற்றி தீபாவளி விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர், கூறியதாவது: நெல்லை மாவட்டத்திற்கு வருடாந்திர கதர் விற்பனை இலக்காக 21-22ம் ஆண்டிற்கு ரூ.41 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை தாண்டி ரூ.44.87 லட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கிராமப்பொருள்கள் மட்டும் ரூ.17.56 லட்சம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கதர் விற்பனை இலக்காக ரூ.46.25 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் 10 மாத தவணையில் கடனுக்கு கதர் ரகங்களை பெற்று கொள்ளலாம்.
தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள், அரசு மருத்துவமனை வளாகங்களில் தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் தீபாவளி வரை செயல்படும்.
மத்திய, மாநில அரசுகளின் உதவிபெறும் கதர் மற்றும் பாலிவஸ்திரா ரகங்களுக்கு 30 சதவீதமும், உல்லன் ரகங்களுக்கு 20 சதவீதமும் சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. நூற்பாலர்கள், ெநசவாளர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் கதர் ஆடைகளை அதிகம் வாங்க வேண்டும் என்றார்.