ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் பதவி குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து வரும் நிலையில், தனது ஆட்சி 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் என்றும், தானே முதல்வராக தொடர்வதாகவும் அவர் சூசகமாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடாமல் விலகியதைத் தொடர்ந்து, ராஜஸ்தான் முதல்வர் பதவியிலிருந்து அசோக் கெலாட் நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இவருக்கு பதிலாக இளம் தலைவரான சச்சின் பைலட்டை அந்த பதவிக்கு கொண்டு வர கட்சித் தலைமை விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், டெல்லியில் இருந்து ராஜஸ்தான் திரும்பிய முதல்வர் அசோக் கெலாட், பிகானேரில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: காங்கிரஸ் அரசு ஐந்தாண்டுகளை நிறைவு செய்யக்கூடாது என்பதற்கான நடவடிக்கைகளை பாஜ முயற்சித்து வருகின்றது. ஏற்கனவே குதிரை பேரத்திலும் ஈடுபட்டது. ஆனால் எங்கள் எம்எல்ஏக்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர். யாராலும் அவர்களை அசைக்க முடியாது. எனது கடைசி மூச்சு வரை நான் ராஜஸ்தான் மக்களுக்காக சேவை செய்வேன். இதில் பல அர்த்தங்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.