×

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பிசான சாகுபடிக்கு அடவிநயினார் அணையில் தண்ணீர் திறப்பு: 7643 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

செங்கோட்டை: விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பிசான சாகுபடிக்காக அடவிநயினார் அணையில் இருந்து பாசனத்துக்காக நேற்று முதல் விநாடிக்கு 100 கன அடி தண்ணீரை கலெக்டர் ஆகாஷ் திறந்து வைத்தார். இதன் மூலம் 7643 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுமென நீர்வளத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

நீர்வளத்துறை கட்டுபாட்டில் தென்காசி மாவட்டம் மேக்கரை மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 132.2 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை உள்ளது. இந்த அணை மூலம் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இப்பகுதியில் தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்ததால் அடவிநயினார் அணை நிரம்பியது.

எனவே, பிசான சாகுபடிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்ைக விடுத்தனர். இதையேற்று பிசான சாகுபடிக்காக அடவிநயினார் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா அறிவித்தார். இதன்படி நேற்று முதல் அடவிநயினார் அணையில் இருந்து கலெக்டர் ஆகாஷ் தண்ணீர் திறந்து வைத்தார். விநாடிக்கு 100 கனஅடி வீதம் 955.39 மில்லியன் கன அடி வரை பிப்.26ம் தேதி வரை 150 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதன் மூலம் மேட்டுக்கால், கரிசல்கால், பண்பொழிகால், வல்லாக்குளம்கால், இலத்தூர்கால், நயினாரகரம்கால், கிளங்காடுகால், கம்பளிக்கால், புங்கன்கால், சாம்பவர் வடகரைகால் மற்றும் இரட்டைக்குளம் கால்வாய் ஆகியவற்றின் நேரடி மற்றும் மறைமுகப் பாசனம் மூலம் மொத்தம் 7,643.15 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து குழு தலைவி தமிழ்ச்செல்வி, வடகரை பேரூராட்சி தலைவர் ஷேக் தாவூது, செயற்பொறியாளர் சிவகுமார், உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர்  பாலசுப்பிரமணியன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் ஜாஹிர் உசேன், திமுக வடகரை செயலாளர் தங்கப்பா, விவசாய சங்க நிர்வாகிகள் முகமது இஸ்மாயில், மன்சூர், தங்கம், வடகரை அச்சன்புதூர் இலத்தூர் சுரண்டை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

*கருப்பாநதி அணையும் திறப்பு

கடையநல்லூர்: 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணை மூலம் பெருங்கால்,  பாப்பான்கால், சீவலன்கால், இடைக்கால், கிளங்காடுகால், ஊர்மேலழகியான் கால்  ஆகியவற்றின் மூலம் மொத்தம் 9,514.70 ஏக்கர் நிலங்கள்  பாசன வசதி பெறுகிறது. இந்த அணையில் இருந்து பிசான சாகுபடிக்கு  நேற்று முதல் கலெக்டர் ஆகாஷ் தண்ணீர் திறந்து வைத்தார். பிப்.26ம் தேதி வரை 150 நாட்களுக்கு நாள்  ஒன்றுக்கு விநாடிக்கு 25 கன அடி வீதம் 1,189.34 மில்லியன் கன அடி வரை  தண்ணீர் திறக்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து  தலைவி  தமிழ்ச்செல்வி, செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி பொறியாளர் சரவணக்குமார்,  உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் திரிகூடபுரம்  அருணாசலபாண்டியன், திரிகூடபுரம் திமுக கிளை செயலாளர் சுப்பிரமணியன்,  பெரியசாமி, ரவி, 6வது வார்டு உறுப்பினர் மைதீன் ஒலி, மாரித்துரை, திரிகை  ராஜ், சிவா மற்றும் கருப்பாநதி நீர் பகிர்மான சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Adavinayanar , Adavinayanar dam water opening for rice cultivation on demand of farmers: 7643 acres of land will be irrigated
× RELATED தென்காசியில் அடவிநயினார்கோவில்,...