×

28 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்.. இலவசமாக வாகனங்கள் அனுமதி..!!

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் 28 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் அனைத்து வாகனங்களும் இலவசமாக செல்ல நேரிட்டது. உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சியில் சுங்கச்சாவடி உள்ளது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் மைய பகுதியில் உள்ள சுங்க சாவடியில், தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சுங்கச்சாவடியில் 120க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆள் குறைப்பு நடவடிக்கை காரணமாக முன்னறிப்பு இன்று 28 ஊழியர்கள் திடீரென பணிநீக்கம் செய்யப்படுவதாக நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள், அலுவலகத்தின் நுழைவு வாயில் பகுதியில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊழியர்களின் உள்ளிருப்பு போராட்டத்தின் காரணமாக சுங்கச்சாவடிகளின் அனைத்து வசூல் மையங்களின் கதவுகளும் திறக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் இலவசமாக சென்றன.

உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி மகேஷ் தலைமையிலான போலீசார் குவிக்கப்பட்டு ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணி கண்ணன் சுங்கச்சாவடி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஊழியர்கள் யாரையும் பணிநீக்கம் செய்யக்கூடாது என்றும் 28 ஊழியர்களையும் பணியில் மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சுங்கச்சாவடி ஊழியர்களின் உள்ளிருப்பு போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. தீர்வு இல்லாவிட்டால் போராட்டம் தீவிரமாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Unandurbetta , Employees sacked, Ulundurpet toll gate, protest
× RELATED பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட...