சென்னை: நடிகை தமன்னா பப்லி பவுன்சர் என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ளார். மதுர் பண்டார்கர் இயக்கி இருந்த இந்த படத்தில் அவர் மதுக்கூடத்தில் வேலை செய்யும் பெண் மெய்காப்பாளராக நடித்திருந்தார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் நடிக்க வந்தபோது ஹீரோயின் என்றால் திரையில் இப்படித்தான் தோன்ற வேண்டும், இந்த மாதிரிதான் உடைகள் அணிய வேண்டும், என நிறைய நிபந்தனைகள் இருந்தது. இது ஒரு வகையில் ஆணாதிக்க சிந்தனைதான். ஆனால் இப்போது ஹீரோயின்களுக்கான அந்த பிம்பம் உடைந்து விட்டது. அவர்கள் சுதந்திரமாகி விட்டார்கள். அதன் ஒரு அடையாளம்தான் பப்லி பவுன்சர்.
இன்றைக்கு நடிகைகள் பரிசோதனை முயற்சிகளை செய்ய முடிகிறது. கடந்த இரண்டு வருடங்களாக, பலதரப்பட்ட சினிமாக்களை உருவாக்கி, அதற்குச் சிறப்பாகச் செயல்படும் ஒரு தளமாக ஓடிடி உருவாகி இருக்கிறது. திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் பலதரப்பட்ட விஷயங்களையும் கதைகளையும் எடுக்க இந்த தளம் வாய்ப்புகளை வழங்குகிறது. பல்வேறு வகையான உள்ளடக்கங்களுக்கான சாளரங்களைத் திறந்துள்ளது.