புதுடெல்லி: ‘நீதிமன்றம் என்பது விளம்பரம் தேடக் கூடிய இடமல்ல’ என வழக்கு ஒன்றில் மனுதாரரை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டித்தனர். மத்திய பிரதேசத்தை சேர்ந்த மபி ஜன் விகாஸ் கட்சி, அம்மாநில உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தது. அதில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சில நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன. அதன் மூலம், இயந்திரத்தில் முறைகேடு செய்யப்பட வாய்ப்புள்ளது. எனவே, மின்னணு இயந்திரத்தை முழுமையாக தேர்தல் ஆணையமே நிர்வகிக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ஏ.எஸ்.ஓகா அடங்கிய அமர்வு, ‘‘தேர்தலில் போட்டியிட்டு மக்களிடம் அதிக அங்கீகாரம் பெறாத கட்சி, இப்போது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அங்கீகாரம் பெற முயற்சிக்கிறது. நீதிமன்றங்கள் நீங்கள் விளம்பரம் தேடும் இடமல்ல’’ என கண்டித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.