தா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கீழமைக்கேல்பட்டி பகுதியில் கடந்த சில மாதங்களாக மான்கள் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த பகுதியை சுற்றிலும் விவசாய நிலங்கள் உள்ளதால் இரை தேடி மான்கள் வந்து செல்கின்றன. சில மாதங்களுக்கு முன் 2 மான்கள் கம்பி வேலியில் சிக்கிய நிலையில் பொதுமக்கள் மீட்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் ஒரு வயதான பெண் மான், மைக்கேல்பட்டி கிராமத்துக்குள் நேற்று புகுந்தது. அப்போது அப்பகுதியில் இருந்த நாய்கள் துரத்தி மான் குட்டியை கடித்து குதறியது.
இதனால் நாய்களிடமிருந்து தப்பித்து ஒரு வீட்டுக்குள் மான்குட்டி புகுந்தது. இதை பார்த்த பொதுமக்கள், மான் குட்டியை பிடித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் வந்து மான் குட்டியை மீட்டு பெற்றுக்கொண்டு அரியலூருக்கு கொண்டு சென்றனர். ஆனால் நாய்கள் கடித்ததில் காயமடைந்து செல்லும் வழியிலேயே மான் குட்டி இறந்தது. இதையடுத்து கீழப்பழுவூரில் உள்ள கால்நடை மருத்துவமனை கால்நடை உதவி மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்து மான்குட்டியை அடக்கம் செய்தனர்.