பெரம்பூர்: கொரோனாவைவிட ஆர்எஸ்எஸ் மிகவும் ஆபத்தானது என கொளத்தூரில் நடந்த திமுக முப்பெரும் விழாவில், திராவிட இயக்க தமிழர் பேரவை நிறுவனர் சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார். சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் மேற்கு பகுதி திமுக சார்பில், திமுக முப்பெரும் விழா கொளத்தூரில் நேற்று நடந்தது. திராவிட இயக்க தமிழர் பேரவை நிறுவனர் சுப.வீரபாண்டியன், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு சிறப்புரையாற்றி பேசினர். இதில், மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, பகுதி செயலாளர்கள் நாகராஜன், ஐசிஎப் முரளி மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
விழாவில், சுப.வீரபாண்டியன் பேசியதாவது: திமுகவின் உண்மையான எதிரி அதிமுக அல்ல. ஆர்எஸ்எஸ்தான். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நம்மை பிரிக்க வந்த இயக்கம். ஏதேதோ செய்து ஆட்சியை கலைத்துவிடலாம் என கனவு காணாதீர்கள். இன்றைக்கும் என்றைக்கும் உங்களால் இந்த ஆட்சியை கலைக்க முடியாது. இனி தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி மட்டும்தான். அதிமுகவுக்கும், நமக்குமானது வெறும் அரசியல் போராட்டம். பாஜகவுக்கும் நமக்குமானது சித்தாந்த கருத்துகள் கொண்ட தத்துவ பரம்பரை போராட்டம். கொரோனாவைவிட ஆர்.எஸ்.எஸ் மிகவும் ஆபத்தானது. கொரோனா குறைந்துவிட்டது. ஆனால், தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் நுழைய பார்க்கிறது. ஒருபோதும் முதலமைச்சர் அனுமதிக்கமாட்டார்.
திராவிட முன்னேற்றக்கழகத்தைவிட்டால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. அண்ணாமலை கூறுகிறார், காவல்துறை அடித்தால் திருப்பி அடிப்பேன் என்று. அடித்து பாருங்கள் என்ன நடக்கிறது என்று தெரியும். பிற மாநிலங்களில் மத கலவரத்தை உருவாக்க நினைக்கிறார்கள். தமிழகத்தில் ஒருபோதும் அது நடக்காது. நான் வரலாறு பேசுவதாக நிறைய பேர் குற்றம் சாட்டுகின்றனர். எங்களுக்கு வரலாறு இருக்கிறது, அதனால் பேசுகிறோம். வரலாறு இல்லாதவர்கள் ஒன்றும் செய்ய முடியாது.