×

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரன் மகேஷ்குமார் என்பவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தன்னுடைய செல்வாக்கினை பயன்படுத்தி நிலத்தை அபகரித்து கொண்டதாக மகேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவருடையன் மகள் ஜெயப்ரியா மற்றும் மருமகன் நவீன்குமார் ஆகியோருக்கு எதிராக கொலை மிரட்டல், சதி திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மத்திய குற்ற பிரிவு போலீசார் தாக்கல் செய்திருந்த இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் இந்த வழக்கில் குற்றம் சட்டப்பட்டிருந்த அவருடைய மகள் மற்றும் மருமகன் ஆகியோரும் மனுத்தாக்கல் செய்திருந்தார்கள். இதில் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவில் தனது மருமகனின் சகோதரன் மகேஷ் அளித்த பொய் புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், 2016-ம் ஆண்டு நடந்ததாக கூறப்பட்ட சம்பவத்திற்கு 2021-ம் ஆண்டு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதாக ஜெயக்குமார் தரப்பு வாதமாக முன் வைக்கப்பட்டது.

மேலும், 2016-ம் ஆண்டு ஜெயக்குமார் அமைச்சராக இருந்ததால் தான் புகார் அளிக்க வில்லை என மகேஷ் தரப்பில் வாதிடப்பட்டது. எனவே, அனைத்து தரப்பின் வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று நீதிபதி இளந்திரையன் தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில் ஜெயக்குமார் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்டு அவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். அதேபோல அவரது மகள் மற்றும் மருமகன் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.      


Tags : Chennai High Court ,Jayakumar , Jayakumar, Land, Expropriation, Suit, Cancellation, High Court, Order
× RELATED தபால் வாக்குப் பதிவு நடைமுறை தொடங்கி...