சியோல்: கமலா ஹாரிஸ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டி உள்ளது. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதி சடங்கில் பங்கேற்ற அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அங்கிருந்து தென் கொரியா சென்றார். அவரது வருகைக்கு கடந்த புதன்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என வட கொரியா ஒரே வாரத்தில் 2 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இந்நிலையில், தென்கொரியா வந்த கமலா ஹாரிஸ் அந்நாட்டின் அதிபர் யூன் சுக்-யோலை சந்தித்தார். அப்போது, `இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு மற்றும் வளங்கள் தொடர்பான உறவு நன்றாக இருக்கிறது. தனது வருகை இரு தரப்பு உறவை வலுப்படுத்துவதில் திருப்பு முனையாக அமையும்,’ என்று கூறினார். கமலா ஹாரிஸ் தென் கொரியாவில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், வட கொரியா மீண்டும் ஒரு ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது.