பாணாவரம்: ஒடிசா மாநிலத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பாணாவரத்தை சேர்ந்த ராணுவ அதிகாரி, தூக்குப்போட்டு தற்கொலை செய்த கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார்(44). இவர், ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் அருகில் உள்ள கோபால்பூரில், இந்திய ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றி வந்தார். அவருக்கு சங்கீதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். அவர்கள் பாணாவரம் திடீர் நகரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஒடிசா மாநிலத்தில் ராணுவ அதிகாரி சசிகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நண்பர்கள் மூலம் குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சசிகுமாரின் சகோதரர் உள்ளிட்ட குடும்பத்தினர் சிலர் கோபால்பூர் விரைந்தனர்.