குன்னூர்: திருச்சி பொன்மலை பணிமனையில் புதுப்பிக்கப்பட்ட 2 மலை ரயில் இன்ஜின்கள் குன்னூர் வந்தடைந்தது. நீலகிரி மாவட்டத்தில் 2ம் கட்ட சீசன் துவங்கி உள்ளது. இதனால் சமவெளி பகுதிகள் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை நீராவி இன்ஜின் மூலம் மலை ரயில் இயக்கப்படுகிறது.
குன்னூர்-ஊட்டி இடையே டீசல் இன்ஜின் மூலம் மலை ரயில் இயக்கப்படுகிறது. இதில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதையொட்டி குன்னூர்-ஊட்டி இடையே மலை ரயிலை தடையின்றி இயக்க 2 டீசல் இன்ஜின்கள் பராமரிப்பு பணிகளுக்காக திருச்சி பொன்மலைக்கு கொண்டு செல்லப்பட்டன.
தற்போது பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்று புதுப்பிக்கப்பட்டு மீண்டும் குன்னூர் பணிமனைக்கு ரயில் இன்ஜின்கள் கொண்டு வரப்பட்டன. இரண்டாம் கட்ட சீசனுக்காக வரும் சுற்றுலா பயணிகள் வசதிக்கேற்ப தடையின்றி மலை ரயில் இயக்க ரயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.