சென்னை: உயர்கல்வித் துறை சார்பில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் விரிவுரையாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 1024 நபர்களுக்கு பணிநியமன ஆணையினை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் விரிவுரையாளர் பணியிடத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1024 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 11 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார். அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில், விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு உரிய நபர்களை தெரிவு செய்திட ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 27.11.2019 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டு, 8.12.2021 முதல் 13.12.2021 வரை கணினி வழித் தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
அதன்படி, விரிவுரையாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 1024 நபர்களுக்கு முதலமைச்சர் இன்று பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் முனைவர். தா. கார்த்திகேயன், இ.ஆ.ப., தொழில்நுட்ப கல்வி ஆணையர் க. லட்சுமிபிரியா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.