×

பாக். பிரதமர் பதவி விலக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி:ரகசிய பேச்சு ஆடியோ கசிவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமரின் ஷெபாஸ் ஷெரீப்பின் அலுவலக அறைக்குள் பேசப்பட்ட ரகசிய பேச்சுகளின் ஆடியோ வெளியானதால், அவர் பதவி விலகும்படி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷெபாஸ் ஷெரீப் உள்ளார். இவர் தனது அலுவலக அறையில் தனது அமைச்சர்கள், உயரதிகாரிகளுடன் பேசிய ரகசிய பேச்சுகள், ஆடியோவாக வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து அணுமின் உலைக்கான இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்கான வசதிகளை தனது மருமகனான ரஹீலுக்கு செய்து தரும்படியும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-என் கட்சியின் துணை தலைவரான மரியம் நவாஸ் ஷெரீப் தன்னிடம் கேட்டுள்ளதாக உயரதிகாரியிடம் அவர் பேசுவதும், இடைத்தேர்தல் தொடர்பாக கட்சியின் முன்னணி தலைவர்களுடன் பேசுவதும் ஆடியோவாக வெளியாகி இருக்கிறது.

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியை சேர்ந்த பவத் சவுத்ரி, இவற்றை வெளியிட்டுள்ளார். இந்த ஆடியோ வைரலானதை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமரின் அலுவலக பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. எனவே, பிரதமர் பதவியில் இருந்து ஷெபாஸ் ஷெரீப் விலக வேண்டும் என்று இம்ரான் கானும், இதர எதிர்கட்சி தலைவர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தனது ஆடியோ வெளியானது தொடர்பாக விசாரணை நடத்தும்படி ராணுவ புலனாய்வு அமைப்புகளின் கூட்டு  விசாரணைக் குழுவின் விசாரணைக்கு ஷெபாஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும், தேசிய பாதுகாப்புக் குழுவின் (என்எஸ்சி) கூட்டத்தையும் இன்று கூட்டியுள்ளார்.

*நாடு திரும்பினார் இஷாக் தர்தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால், பாகிஸ்தான் முன்னாள் நிதியமைச்சர் இஷாக் தர் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இவரை மீண்டும் நிதியமைச்சராக்கும்படி, பிரதமர் ஷெபாசுக்கு அவருடைய அண்ணன் நவாஸ் ஷெரீப் அறிவுரை கூறினார். அதன்படி, இஷாக் தர் நேற்று பாகிஸ்தான் திரும்பினார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘பொருளாதார சிக்கலில் இருந்து நாட்டை மீட்டெடுப்பேன்,’ என்று கூறினார். இஷாக் தர் பதவியேற்பதற்காக நிதியமைச்சர் மிப்தா இஸ்மாயில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Tags : Pak. Opposition parties raise war flag for Prime Minister's resignation: audio of secret talks leaked
× RELATED அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி...