×

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு இறுதி அஞ்சலி: மோடி உள்ளிட்ட 217 உலக தலைவர்கள் மரியாதை

டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு அரசு சார்பில் நடத்தப்பட்ட இறுதிச் சடங்கில் பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் மரியாதை செலுத்தினர். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கடந்த ஜூலை மாதம் நாரா நகரில் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய உடல், 15ம் தேதி தகனம் செய்யப்பட்டது. அதன் பிறகு, அவருடைய சாம்பல், எலும்புகள் எடுக்கப்பட்டு, கலசத்தில் வைக்கப்பட்டு, கடந்த 2 மாதங்களாக குடும்பத்தினர் இடையே அஞ்சலி செலுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், அவருக்கு அந்நாட்டு அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி டோக்கியோவின் புடோகன் அரங்கில் நேற்று நடந்தது.  இதில், பிரதமர் மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட 217 நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மனைவி அகி அபே, மறைந்த தனது கணவர் அபேவின் அஸ்தி அடங்கிய பெட்டியை எடுத்து வந்தார். அந்த பெட்டி அலங்கரிக்கப்பட்ட மலர்களின் நடுவே வைக்கப்பட்டு, அனைத்து தலைவர்களும் மரியாதை செலுத்தினர். அபேவின் வரலாற்று சிறப்பு மிக்க உரைகள் ஒலிபரப்பப்பட்டது. ஜப்பான் பிரதமர் கிஷிடோ ‘ஜப்பான் மற்றும் உலகின் வளர்ச்சிக்காக தெளிவான பார்வை கொண்ட ஓர் உன்னதமான தலைவர் அபே’ என புகழாரம் சூட்டினார். பிரதமர் மோடி மலர் தூவி வணங்கி அபே அஸ்திக்கு மரியாதை செலுத்தினார். அபேவுக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்டோர், நிகழ்ச்சி நடந்த அரங்குக்கு வெளியே அமைதி ஊர்வலம் நடத்தினர்.

*மோடி-கிஷிடோ சந்திப்பு
பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அபே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துக் கொண்டார். மேலும், இந்தியா - ஜப்பான் உறவு பலப்பட அபேவின் உன்னதமான பங்களிப்பையும் மோடி நினைவு கூர்ந்தார். இதில் இருதரப்பு உறவு தொடர்பாக இரு தலைவர்கள் பேசியதாக வெளியுறவு அமைச்சக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Shinzo Abe ,Modi , Last tribute to former Japanese Prime Minister Shinzo Abe: 217 world leaders including Modi pay their respects
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...