மும்பை: மும்பையில் மிரட்டி பணம் பறித்த வழக்கில் நிழல் உலக தாதா தாவுத் இப்ராகிமின் கூட்டாளி கைது செய்யப்பட்டார். நிழல் உலக தாதாவான தாவூத் இம்ராகிமின் நெருங்கிய கூட்டாளி ரியாஷ் பதி. இவரை, மும்பை காவல்துறையின் மிரட்டி பணம் பறித்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் அந்தேரியில் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பதி மற்றும் தாவுத் இப்ராகிமின் நெருங்கிய உதவியாளரான சோட்டா சகிலின் கூட்டாளி சலீம் புரூட் (எ) முகமது சலீம் இக்பால் குரோஷி ஆகியோர் வெர்சோவா வர்த்தகரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். அந்த வர்த்தகரிடம் இருந்து பதியும், சலிம் புரூட்டும் ரூ.30 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் ரூ.7.5 லட்சம் பணம் ஆகியவற்றை மிரட்டி பறித்துள்ளனர். இந்த வழக்கில் பதி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார். சலீம் புரூட்டும் ஏற்கனவே தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.