×

கள்ளக்குறிச்சி வழக்கில் மாணவியின் பெற்றோர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை: ஐகோர்ட்டில் சிபிசிஐடி தரப்பு குற்றச்சாட்டு

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு விசாரணைக்கு மாணவியின் பெற்றோர் ஒத்துழைப்பதில்லை என்று சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, புலன் விசாரணையை விரைந்து மேற்கொண்டு விரைவில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிசிஐடி தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கை மாற்றக்கோரி கோரிக்கை விடுத்த நிலையில் வழக்கு தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருவதால் இந்த மனுவை ஏன் முடித்து வைக்க கூடாது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், உயர் நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை கண்காணித்து வருகிறது. ஏற்கனவே இரண்டு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பான வீடியோ காட்சிகள் அடங்கிய குறுந்தட்டை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

அதற்கு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ஏற்கனவே இந்த வழக்கின் புலன் விசாரணை முடியும் வரை வழக்கு தொடர்பான ஆவணங்களை மாணவியின் பெற்றோர் தரப்புக்கு வழங்க கூடாது என்று நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கின் புலன் விசாரணைக்கு மாணவியின் பெற்றோர் ஒத்துழைக்க மறுக்கிறார்கள். விடுதியில் மாணவி பயன்படுத்திய மொபைல் போனை விசாரணை அதிகாரிகளிடம் தர மறுக்கிறார்கள். மரபணு சோதனைக்கு மாதிரிகள் வழங்கவும் மறுக்கிறார்கள் என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாணவி செல்போன் பயன்படுத்தி இருந்தால் அதை புலன் விசாரணை செய்யும் சிபிசிஐடி போலீசாரிடம் வழங்க வேண்டும். விசாரணையின் முன்னேற்றம் குறித்து அடுத்த அறிக்கையை அக்டோபர் 10ம் தேதி சிபிசிஐடி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

Tags : Kallakurichi ,CBCID ,ICourt , Student's parents not cooperating with investigation in Kallakurichi case: CBCID alleges in ICourt
× RELATED பங்குச்சந்தையில் நஷ்டத்தால் விரக்தி...