×

ஆந்திர அரசு பாலாற்றில் நீர்த்தேக்கம் கட்டுவதை தடுக்க நடவடிக்கை: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆந்திர மாநிலம், குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பேசிய ஆந்திர மாநில முதலமைச்சர், தமிழ்நாடு மற்றும் ஆந்திர எல்லையில், கனகநாச்சியம்மன் கோயில் அருகே இருக்கும் பாலாறு நீர்த்தேக்கத்தின் உயரத்தை அதிகரிக்காமல், தண்ணீர் சேமிக்கும் அளவை அதிகரிக்க உள்ளதாகவும்; இதற்காக 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் பணிகள் துவங்கப்பட உள்ளதாகவும்; குடிப்பள்ளி மற்றும் சாந்திபுரத்தில் தண்ணீரை சேமிக்க இரண்டு நீர்த்தேக்கங்கள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.250 கோடி  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பேசி இருக்கிறார்.

பாலாறு, கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தாலுகாவில் உற்பத்தி ஆகி, செங்கல்பட்டு அருகில் வாயலூர் என்னுமிடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தமிழக நதிகளிலேயே பாலாற்றில்தான் நிலத்தடி நீர் அதிகமாக உள்ளது என்று சொல்லப்படுகிறது. அது கர்நாடகாவில் சுமார் 93 கிலோ மீட்டர் தூரமும், ஆந்திர பகுதியில் 33 கிலோ மீட்டர் தூரமும் பயணித்து தமிழ்நாட்டை வந்தடைகிறது.  தமிழ்நாட்டில் 222 கிலோ மீட்டர் தூரம் பாலாறு பயணிக்கிறது. 222 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் பாலாறு, வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்ட மக்களுக்கு உயிர் நாடியாக பல்வேறு வகைகளில் விளங்குகிறது.

விவசாயம், குடிநீர் மற்றும் அங்குள்ள தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வசதி ஆகியவை பாலாற்றின் வழியாகத் தான் அந்தந்த மாவட்ட மக்களுக்கு கிடைக்கிறது. ஆந்திர மாநில முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு எதிராக பேசியிருக்கிறார் என்றால் அதனை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது எதிர்க்கட்சிகளின் கடமை. இதன் அடிப்படையிலும், கர்நாடகாவில் அணைகள் கட்டப்பட்டது போன்ற நிலைமை ஏற்படக்கூடாது என்பதன் அடிப்படையிலும் இந்தப் பிரச்னையை நான் அரசின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

தமிழ்நாட்டு மக்களின் எண்ணத்தினை பூர்த்தி செய்யும் வகையில், கனகநாச்சியம்மன் கோயில் அருகே இருக்கும் பாலாறு நீர்த்தேக்கத்தில் தண்ணீர் சேமிக்கும் அளவை அதிகரிப்பதையும், குடிப்பள்ளி மற்றும் சாந்திபுரத்தில் இரண்டு நீர்த்தேக்கங்கள் கட்ட இருப்பதையும் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : AP Government ,OPS , Andhra Govt steps to stop construction of reservoir in Bala: OPS insists
× RELATED பா.ஜ.க. கூட்டணியில் எத்தனை தொகுதிகளை ஏற்பது?-ஓ.பி.எஸ்.ஸுக்கு அதிகாரம்