×

மனைவி, மாமியார் கண் எதிரே பிரபல ரவுடி சரமாரி வெட்டி கொலை: வீட்டுக்குள் புகுந்து 7 பேர் கொண்ட மர்ம கும்பல் வெறிச்செயல்

சென்னை: மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட பொத்தேரி, அண்ணா நகர், பெரியார் தெருவை சேர்ந்தவர் சந்துரு (27), பிரபல ரவுடி. இவர் மீது மணிமங்கலம் மற்றும்  மறைமலைநகர் காவல் நிலையங்களில் தலா ஒரு கொலை வழக்கு, ஓட்டேரி, கூடுவாஞ்சேரி  உள்ளிட்ட  பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட  பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது மனைவி பிரீத்தி (26), மகன் வருண் (5), இவர்களுக்கு சமீபத்தில்தான் ஒரு பெண் குழந்தை பிறந்தது. எனவே பிரீத்தி தாய் வீட்டில் வசித்து வருகிறார். எனவே, மனைவி பிரீத்தி மற்றும் குழந்தைகளை பார்க்க ரவுடி சந்துரு அடிக்கடி கூடுவாஞ்சேரி அருகே, தைலாவரத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு வருவது வழக்கம்.

கடந்த ஒருவாரமாக சந்துருவின் நடவடிக்கையை கண்காணித்து வந்த கூலிப்படையினர், மாமியார் வீட்டிற்கு சந்துரு தனியாக வருவதையும், வீட்டில் அவருக்கு பாதுகாப்பு எதுவும் இல்லை என்பதையும் தெரிந்து கொண்டனர். இந்நிலையில், நேற்று மதியம் 12.30 மணிக்கு மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க  பைக்கில் மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார். இதுபற்றி அறிந்த 7 கொண்ட கூலிப்படையினர், அவருக்கு தெரியாமல் 3 பைக்குகளில் பின் ெதாடர்ந்து வந்தனர். வீட்டிற்குள் சென்றுவிட்டால் சந்துரு வெளியே தப்ப முடியாது என்பதை உறுதி செய்த கூலிப்படை, அவர் வீட்டிற்குள் புகுந்த சில நிமிடங்களில் அங்கு சுற்றி வளைத்தனர். உஷாரான சந்துரு, உடனடியாக பாத்ரூமிற்குள் நுழைந்து உள்ளே பூட்டிக் கொண்டார். கூலிப்படை, அந்த வீட்டில் இருந்த ஒவ்வொரு அறையின் கதவை உடைத்து சந்துருவை தேடினர். இதனால், அதிர்ச்சியடைந்த சந்துருவின் மனைவி ப்ரீத்தி, மாமியார் செல்வி (47), மாமனார் பெருமாள் (49) ஆகியோர், கூலிப்படையிடம் என் மருமகனை ஒன்றும் எதுவும் செய்ய வேண்டாம்.

எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளனர். இதில் 3 பேர் கொண்ட கும்பல் மாமனார் பெருமாளை வீட்டுக்கு வெளியே அடித்து துரத்தியது. உயிருக்கு பயந்து வெளியே வந்த அவர் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். மற்றொரு கும்பல் மாமியார் மனைவி பிரீத்தியை பிடித்து கீழே தள்ளி அடித்து உதைத்தது. மேலும், உடனே இங்கு வராவிட்டால் உன் மனைவி குழந்தைகளை கொன்று விடுவோம், என மிரட்டியுள்ளது. இதனால், மனைவி அலறி கூச்சலிட்டுள்ளார். இதனால், குழந்தையும் அழுதுள்ளது. இதனால், மனைவி, குழந்தையை ஏதாவது செய்துவிட போகிறார்கள், என பயந்து ரவுடி சந்துரு, பாத்ரூமில் இருந்து வெளியே வந்தார்.

இதை எதிர்பார்த்து காத்திருந்த கூலிப்படையினர் நான்கு பக்கமும் சூழ்ந்து கொண்டு சந்துருவை சரமாரியாக வெட்டி சாய்த்தனர். அதற்குள் அக்கம் பக்கத்தினர் அந்த வீட்டின் முன்பு திரண்டதால், எங்கே மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் கூலிப்படையினர் தாங்கள் 3 பைக்குகளில் ஒன்றை விட்டுவிட்டு 2 பைக்கில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதி சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Famous rowdy hacked to death in front of his wife and mother-in-law: A mysterious gang of 7 broke into the house and went on a rampage.
× RELATED தகாத உறவு விவகாரத்தில் இளம்பெண்...