சென்னை: தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கிற வகையில் அக்டோபர் 2ம் தேதி “சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி” நடைபெறும் என்று சிபிஎம், சிபிஐ, விசிக தலைவர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் சென்னையில் நேற்று கூட்டாக அளித்த பேட்டி: அண்மைக்காலமாக தமிழகத்தில் வெறுப்பு அரசியலை விதைத்து வன்முறைகளை தூண்டி பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பாஜ மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்பரிவார் அமைப்புகள் திட்டமிட்டு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. சங்பரிவார்களின் இந்த மக்கள் விரோதப் போக்கைக் கண்டிக்கிற வகையிலும், தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கிற வகையிலும் அக்டோபர் 2ம் தேதி மாலை 4 மணியளவில் தமிழகம் முழுவதும் “சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி” நடைபெற உள்ளது. இந்த மனிதச் சங்கிலியில் அனைத்து தரப்பு, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம். மக்கள் ஒற்றுமை, மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம், சமூக அமைதி, மாநில வளர்ச்சி ஆகியவற்றை காப்பாற்றும் முயற்சியின் ஒரு நடவடிக்கையே இது. இதற்கு தமிழக மக்கள் தங்கள் முழு ஆதரவையும் நல்க வேண்டும்.