×

தமிழ்நாட்டில், 6 உர நிறுவனங்களின் 9 உர சேமிப்பு கிடங்குகளில் திடீர் ஆய்வு: விதிகளுக்கு புறம்பாக இருப்பு வைக்கப்பட்ட 3,079 மெ. டன் உரங்களுக்கு விற்பனைத் தடை

சென்னை: தமிழ்நாட்டில், 6 உர நிறுவனங்களின் 9 உர சேமிப்பு கிடங்குகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் விதிகளுக்கு புறம்பாக இருப்பு வைக்கப்பட்ட 3,079 மெ. டன் உரங்களுக்கு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  

22.09.2022 அன்று கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள 6 உர உற்பத்தி நிறுவனங்களின் 9 உர சேமிப்பு கிடங்குகள் மற்றும் மொத்த உர விற்பனைக் கடைகளில் திடீர் ஆய்வு சென்னை வேளாண்மை துணை இயக்குநர் (உரம்) மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் அடங்கிய குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

விருத்தாசலத்தில் இரண்டு மொத்த உர விற்பனை கடைகளில் ஆய்வுகள் மேற்கொண்டபோது வேப்பம் புண்ணாக்கு ஜிங்க் சல்பேட் மற்றும் சர்க்கரை ஆலைக்கழிவிலிருந்து பெறப்படும் பொட்டாஷ் (Potash Derived from Molasses) ஆகிய உர வகைகளின் புத்தக இருப்பிற்கும், உண்மை இருப்பிற்கும் வித்தியாசங்கள் இருப்பது கண்டறியப்பட்டது இருப்பில் இருந்த 95.730 மெ.டன் உரங்களுக்கு விற்பனை தடை வழங்கப்பட்டது.

மேலும், உர உற்பத்தி நிறுவனங்களின் உரச்சேமிப்பு கிடங்குகளில் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ற்கு புறம்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ள காம்ப்ளக்ஸ், டிஏபி, பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட், அம்மோனியம் சல்பேட் மற்றும் ராக் பாஸ்பேட் உரங்கள் இருப்பு கண்டறியப்பட்டு மொத்தமாக 3,078.800 மெ.டன் உரங்களுக்கு விற்பனை தடை வழங்கப்பட்டுள்ளது.  

இது தவிர, உரக்கட்டுப்பாட்டு ஆணை, 1985-ல் பட்டியலிடப்படாத இடுபொருள் 22.250 மெ.டன் இருப்பில் உள்ளதற்கும் விற்பனை தடை வழங்கப்பட்டுள்ளது. ஆய்வு சமயம், வேளாண்மைத்துறையின் “O” படிவம் ஒப்புதல் இல்லாமல் மற்றும் உரிய பதிவேடுகள் பராமரிக்கப்படாமல் செயல்பட்ட நீரில் கரையும் உரங்கள் சிப்பமிடும் பிரிவிற்கு (பேக்கிங் யூனிட்) விற்பனை தடை விதிக்கப்பட்டது.

ஆய்வில், உர நிறுவனத்திற்குரிய உயிர் ஊக்கி (Bio Stimulant) கொள்கலன் உறைகளில் உள்ள லேபிளில் அடக்கப் பொருட்களின் அளவு குறிப்பிடப்படவில்லை. எனவே, உயிர் ஊக்கி (Bio Stimulant)-  14.820 மெ.டன்னிற்கு விற்பனை தடை வழங்கப்பட்டுள்ளது. மேலும், அதனடிப்படையில் சேலம் மாவட்டத்தில் உள்ள உயிர் ஊக்கி தயாரிப்பு நிறுவனத்தில் இருப்பில் உள்ள 12.600 மெ.டன் உயிர் ஊக்கிக்கு (Bio Stimulant) விற்பனை தடை வழங்கப்பட்டுள்ளது.  

இந்த ஆய்வின் போது இருப்பு வைக்கப்பட்ட உர குவியல்களிலிருந்து 13 உர மாதிரிகள் சேகரித்து ஆய்வகங்களுக்கு தரப்பரிசோதனை மேற்கொள்ள அனுப்பப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டில் உரம் விற்பனை செய்யும் நிறுவனங்கள் தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள உர சேமிப்பு கிடங்குகளில் உரக்கட்டுப்பாட்டு ஆணை, 1985-ன்படி, அனுமதி வழங்கிய உரங்களை மட்டும் உர சேமிப்பு கிடங்குகளில் உரிய பதிவேடுகள் பராமரித்து இருப்பு வைக்க வேண்டும்.  

மேலும்,  வேளாண் பெருங்குடி மக்களுக்கு உரிய காலத்தில் தட்டுப்பாடின்றி தரமான உரங்கள் கிடைப்பதற்கு இது போன்ற திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu , In Tamil Nadu, surprise inspection of 9 fertilizer storage warehouses of 6 fertilizer companies: 3,079 mt stocked illegally. Ban on sale of tonnes of fertilizers
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...