சென்னை: அதிமுக அலுவலக கலவரத்தின் போது எடுத்து செல்லப்பட்ட அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை மாதம் 11ம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தது. அப்போது ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே தகராறு ஏற்பட்டு அது கலவரமாக மாறியது. அப்போது அலுவலகத்திற்குள் நுழைந்த பன்னீர்செல்வம் ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டதாக அதிமுக அமைப்பு செயலாளர் சி.வி.சண்முகம் புகார் அளித்திருந்தார். இதன்பேரில் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலக பத்திரம், ஜானகி எழுதி கொடுத்த ஆவணம், அண்ணா அறக்கட்டளையின் ஆவணம், பாண்டிச்சேரி, திருச்சி மற்றும் மதுரையில் உள்ள கட்சியின் சொத்து பத்திரம் உள்ளிட்ட 113 ஆவணங்கள் மீட்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து அனைத்து ஆவணங்களையும் மீட்டதாக தெரிவித்த போலீசார், விரைவில் அவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய போவதாகவும் தெரிவித்தனர்.