×

மகாளய அமாவாசையையொட்டி ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

ஆனைமலை : பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் நேற்று, மகாளய அமாவாசையையொட்டி பக்தர்கள் குவிந்தனர். பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி  கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் கேரள மாநில பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். இந்த கோயிலில் வெள்ளி, செவ்வாய் மற்றும் அமாவாசை தினங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இதில் நேற்று மகாளய அமாவாசை மற்றும் விடுமுறை நாள் என்பதால், மாசாணியம்மன் கோயிலில் குவிந்த வெளியூர் பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்தி கடனாக பட்டுப்புடவைகளை சாத்தியும், தங்கமலர் அர்ச்சனை செய்தும் வழிபட்டனர்.

இதையடுத்து பக்தர்கள் வசதிக்காக பொள்ளாச்சியில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. மாசாணியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால், முன்னெச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், மகாளய அம்மாவாசையையொட்டி அம்பராம்பாளையம் வழியாக செல்லும் ஆழியாற்றில் பலரும், முன்னோர் நினைவாக திதி கொடுத்தனர்.

அதுபோல, மகாளய அமாவாசையையொட்டி பொள்ளாச்சி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோயில், கன்னிகா பரமேஸ்வரியம்மன் கோயில், காமாட்சியம்மன் கோயில், ஊத்துக்காடு ரோடு பத்ரகாளியம்மன் கோயில், கோட்டூர்ரோடு விண்ணளந்த காமாட்சியம்மன் கோயில், நல்லூர் மாகாளியம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து அம்மன் கோயில்களிலும் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில், சுற்றுவட்டார பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : Anaimalai Masaniyamman Temple ,Mahalaya , Anaimalai: Devotees thronged the Anaimalai Masaniyamman Temple near Pollachi yesterday on the occasion of Mahalaya Amavasai.
× RELATED குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்