×

தோஹாவில் நடைபெறும் கால்பந்து போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் 9 வீராங்கனைகள் அறிமுகம்

தண்டையார்பேட்டை: தோஹா நாட்டின் கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் 9 வீராங்கனைகளின் அறிமுக விழா தண்டையார்பேட்டையில் நடைபெற்றது. தோஹா நாட்டின் கத்தாரில் அடுத்த மாதம் 6ம் தேதி முதல் 16ம் தேதி வரை, 14 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் இந்திய அணி சார்பில் பங்கேற்க, தண்டையார்பேட்டையில் உள்ள கருணாலயா சமூகசேவை தொண்டு நிறுவனம் சார்பில், வடசென்னையில் சாலையோரங்களில் வசிக்கும் கால்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கும் 9 பெண் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இந்திய அணி சார்பில் விளையாடுவதற்கு தேர்வான 9 வீராங்கனைகள், 3 தன்னார்வலர்களை கொண்ட 12 பேர், வரும் 6ம் தேதி தோஹா நகருக்கு விமானம் மூலம் செல்கின்றனர். இந்நிலையில், இந்திய அணி சார்பில் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் 9 வீராங்கனைகளின் அறிமுக விழா நேற்று மாலை தண்டையார்பேட்டையில் நடைபெற்றது. 9 வீராங்கனைகளுக்கு கருணாலயா தொண்டு நிறுவன செயலாளர் பால்சுந்தர் சிங், மாமன்ற உறுப்பினர் குமாரி நாகராஜ் ஆகியோர் பூங்கொத்து வழங்கி அறிமுகப்படுத்தினர். இதில் பங்கேற்கும் 9 வீராங்கனைகளும், தோஹாவில் நடைபெறும் உலக கால்பந்து போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்று கோப்பையுடன் நாடு திரும்புவோம் என நம்பிக்கை தெரிவித்தனர்.

Tags : Doha , Introduction of 9 women players who will participate in the football tournament in Doha
× RELATED மருத்துவ நிறுவன உபகரண ஒப்பந்தத்தில்...