×

காரைக்குடி அருகே பட்டப்பகலில் கல்லூரி மாணவியை கம்பியால் அடித்துக்கொன்ற காதலன்

காரைக்குடி: காரைக்குடி அருகே காதலியை இரும்புக்கம்பியால் காதலன் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே மாத்தூர் வேல்முருகன் குடியிருப்பை சேர்ந்தவர் சினேகா (22). இவர், காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இலுப்பக்குடி புதுகுடியிருப்பை சேர்ந்தவர் கண்ணன் (29). இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் கண்ணன் பெண் கேட்க சினேகாவின் வீட்டிற்கு சென்றார். அப்போது அவரது அக்காவிற்கு திருமணம் செய்து வைத்த பின்னர் பேசிக் கொள்ளலாம் என சினேகா குடும்பத்தினர் கூறியதாக தெரிகிறது.

இதில் ஏற்பட்ட பிரச்னையில் சினேகாவின் தாத்தாவை கண்ணன்  கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல்நிலையத்தில் சினேகா குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதுகுறித்து அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று பிற்பகல் சினேகாவிற்கு போன் செய்த கண்ணன், அங்குள்ள ரேஷன் கடை அருகே வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து டூவீலரில் சினேகா ரேஷன் கடை அருகே வந்தார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கண்ணன், மறைத்து வைத்திருந்த கம்பியை எடுத்து சினேகாவின் தலையில் பலமாக தாக்கினார். உடனே கண்ணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தலையில் பலத்த காயமடைந்த சினேகா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.  தப்பி ஓடிய கண்ணனை போலீசார்  தேடி வருகின்றனர்.


Tags : Karaikudi , A boyfriend beat a college student with a wire in broad daylight near Karaikudi
× RELATED காரைக்குடியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து!