×

எனது திராவிட மாடல் ஆட்சியின் மையக் கொள்கை மனித நேயமும் சமூகநீதியும் தான்: கனடாவில் நடந்த சமூகநீதி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: எனது திராவிட மாடல் ஆட்சியின் மையக் கொள்கை என்பது மனிதநேயமும்  சமூகநீதியும்தான் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கனடாவில் நடந்த  மூன்றாவது பன்னாட்டு மனிதநேயச் சமூகநீதி மாநாட்டில் தெரிவித்தார். தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் கனடாவில் நடந்த மூன்றாவது பன்னாட்டு மனிதநேயச்  சமூகநீதி மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்று பேசியதாவது: மனிதநேய -  சமூகநீதி மாநாட்டில், சமூகநீதி மண்ணில் இருந்தபடியே நான் கலந்து  கொள்கிறேன். திருவள்ளுவரின் குறளையும் - தந்தை பெரியாரின்  சிந்தனைகளையும் - உலகளாவிய அளவில் கொண்டு செல்வதன் மூலமாக மனிதநேய உலகத்தை -  சமூகநீதி உலகத்தை - சமநீதிஉலகத்தை - சமத்துவ உலகத்தை நாம் உருவாக்க  முடியும். பெரியார் இன்று உலகமயமாகி வருகிறார் என்பதை எண்ணி மகிழ்ச்சி  அடைகிறேன். பெரியார், மனிதநேயத்தையும் - சமூகநீதியையும்தான் வலியுறுத்தினார்.

தன்னைப்போல வலியுறுத்திய உலகத் தலைவர்கள் அனைவரையும் தமிழ்நாட்டுக்கும் அறிமுகம்  செய்தார். அத்தகைய, தந்தை பெரியாரின் பெருந்தொண்டர்களான பேரறிஞர் அண்ணா,  முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் வழித்தடத்தில்தான் எனது தலைமையிலான ஆட்சியை  நடத்தி வருகிறேன். இதற்கு திராவிட மாடல் என்று பெயர்சூட்டி இருக்கிறேன். எனது  திராவிட மாடல் ஆட்சியின் மையக் கொள்கை என்பது மனிதநேயமும்  சமூகநீதியும்தான். அனைத்து இடங்களிலும் சமூக நீதியை நிலைநாட்டி வருகிறோம்.  வகுப்புரிமை எனப்படும் இடஒதுக்கீடு அனைவருக்கும் சமவிகிதத்தில் தரப்பட்டு  வருகிறது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டம்  இயற்றப்பட்டுள்ளது. பெரியார் பிறந்தநாள் சமூகநீதி நாளாக அறிவிக்கப்பட்டு உறுதிமொழி எடுக்கப்படுகிறது. அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாளாக அறிவிக்கப்பட்டு உறுதிமொழி எடுக்கப்படுகிறது. அயோத்திதாச பண்டிதருக்கு  நினைவு மண்டபம் கட்ட இருக்கிறோம். பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக  இலவச போக்குவரத்து பயண வசதி தரப்பட்டுள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப்  பாடலாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பை அடைய தாய்மொழி அறிவு கட்டாயம்  ஆக்கப்பட்டுள்ளது. இல்லம் தேடிக் கல்வி செல்கிறது. மக்களைத் தேடி  மருத்துவம் செல்கிறது. உயர்கல்வி பெறும் அரசுப் பள்ளி மாணவியர்க்கு ஆயிரம்  ரூபாய் தரப்படுகிறது. அரசுப்பள்ளி பிள்ளைகளுக்கு காலை உணவுத் திட்டம்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து இளைஞர்களையும் மாணவ மாணவியரையும்  தகுதியுள்ளவர்களாக ஆக்க நான் முதல்வன் திட்டம் அமலில் உள்ளது. அனைத்து  தொழில் படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவர்க்கு 7.5 விழுக்காடு இட  ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. சமூகநீதிக் கண்காணிப்பு குழுவை பேராசிரியர்  சுப.வீரபாண்டியன் தலைமையில் நிறுவி இருக்கிறோம். ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினர் ஆணையத்தை நீதியசரர் சிவக்குமார் தலைமையில் உருவாக்கி  இருக்கிறோம். இப்படி எண்ணற்ற திராவிட மாடல் திட்டங்களை தீட்டி தமிழ்நாட்டை  வளப்படுத்தி வருகிறோம்.

இந்தியாவின் பிற மாநிலங்களை ஆளும்  அரசுகள், தமிழகத்தின் திராவிட மாடல் கொள்கைகளையும் கோட்பாடுகளையும்  அறிவதில் ஆர்வமாக இருக்கின்றன. தங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்துவதிலும்  துடிப்புடன் இருக்கின்றன. இத்தகைய சூழலில் திராவிட மாடல் தத்துவமானது  உலகளாவிய கவனத்தை ஈர்ப்பதற்காக கனடாவில் இம்மாநாடு நடத்தப்படுவதாகவே  நினைக்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் திராவிடர்கள்தான் என்று  சொன்னார் தந்தை பெரியார். மனிதனுக்குள் ரத்த பேதமும் இல்லை. ஆண் பெண்ணுக்கு  மத்தியில் பால் பேதமும் இல்லை என்று சொன்னவர் தந்தை பெரியார். ஒரு மனிதன்  சக மனிதனை, மனிதனாக நடத்துவதே மனிதநேயம். அனைத்து மனிதர்க்கும் நீதி  வழங்குவதே சமூகநீதி. தந்தை பெரியார் வலியுறுத்திய சமூக நீதி, மானுடப்பற்று,  சுயமரியாதை, பகுத்தறிவு, சமத்துவம் ஆகிய ஐந்தும் உலகளாவிய கருத்தியல்கள்.  இவை, நாடு, மொழி, இனம், எல்லைகள் கடந்தவை.

பெரியார் உலகமயமாக வேண்டும்  என்ற ஆசிரியர் வீரமணியின் நோக்கம் நிறைவேறும் காலம் நெருங்கிக் கொண்டு  இருக்கிறது. இதனை முன்னெடுக்கும் கி.வீரமணி, சோம இளங்கோவன், கண்ணபிரான்  ரவிசங்கர், இலக்குவன் தமிழ், அருள்செல்வி வீரமணி, வி.குமரேசன்,  வீ.அன்புராஜ் ஆகியோருக்கு எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்நிகழ்வில், நான் பங்கெடுத்து உரையாற்ற வாய்ப்பை வழங்கிய கேரி ஆனந்த  சங்கரி மற்றும் அவரது குழுவினருக்கும் - கனடா நாடாளுமன்ற  உறுப்பினர்களுக்கும் - டாண்டன் மற்றும் கனடியன் தமிழ் காங்கிரசைச் சேர்ந்த  சிவன் இளங்கோ - கனடா மனிதநேய அமைப்புக்கும், நான் எனது நன்றியைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.

1932ம் ஆண்டு இலங்கையில் பேசிய தந்தை பெரியார் “நமக்குள் இருக்கும் வேறுபாடுகளை இடித்துத் தள்ளி தரைமட்டம் ஆக்குங்கள். அவற்றின் மீது தேசம், மதம், சாதி என்கிற பாகுபாடு இல்லாத - மனித சமூகம் -  சம உரிமை - சமநிலை என்ற கட்டடத்தைக் கட்டுங்கள். அனைத்து உலக மக்களுடனும்  பிரிவினைக்கு இடமில்லாமல் ஒன்று சேருங்கள். அப்போது, நீங்கள் வெற்றி  பெறுவீர்கள்!” என்று சொன்னார். அதையே நானும் இன்று சொல்கிறேன். ‘மானுட  சமுத்திரம் நான் எனக் கூவு’ என்றார் புரட்சிக் கவிஞர். மனித நேயமும் -  சமூகநீதியும் மட்டுமே மானுட சமுத்திரத்தை ஒன்றாக்கும். இவ்வாறு பேசினார்.

Tags : Chief of ,Social Justice Conference ,Canada ,K. Stalin , Humanity and Social Justice at the core of my Dravidian Model Government: Chief Minister M. K. Stalin's speech at the Social Justice Conference in Canada
× RELATED இந்திய மாணவர் சுட்டு கொலை: கனடாவில் பயங்கரம்